

சென்னை,
மதுவிலக்கு மானியக் கோரிக்கையில் டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நா.பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் த.தனசேகரன், மாநில பொருளாளர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின்போது நா.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
டாஸ்மாக் மதுபான விற்பனை பிரிவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு மானிய கோரிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனைக்கு கேரளாவில் பின்பற்றப்படும் முறையை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கடையின் நிர்வாகம் திருத்தி அமைக்க வேண்டும். இறந்த பணியாளர் குடும்பங்களை கருணையோடு பரிசீலித்து அவர்களுக்கு உதவ வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் தரும் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அடுத்த கட்டமாக கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.