காரிமங்கலத்தில், பிரபல கொள்ளையன் கைது; 53 பவுன் நகை மீட்பு

காரிமங்கலத்தில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 53 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
Published on

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார் நேற்று காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவன் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினான். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அந்த நபர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கரும்பூரை சேர்ந்த சக்திவேல் (வயது 31) என்பதும், பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. இவன் காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவன் மீது மொத்தம் 9 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல கொள்ளையன் சக்திவேலை கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்து 53 பவுன் நகையை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார், அவனை பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். போலீசாரின் வாகன சோதனையில் பிரபல கொள்ளையன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com