கோட்டக்குப்பத்தில் அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் அடகு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. கடையில் இருந்த லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பின.
கோட்டக்குப்பத்தில் அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
Published on

கோட்டக்குப்பம்,

கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 52). இவர் கடந்த 10 ஆண்டுகளாக கோட்டைமேடு சறுக்குப்பாலம் அருகே நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம்போல் அடகுகடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வழக்கம்போல் ராமு அடகு கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது அடகு பிடித்த நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும் கண்டறிந்தார். அந்த லாக்கருக்குள்தான் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் வைக்கப்பட்டிருந்தன.

ராமு கடையை பூட்டிச் சென்றதும், நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் அடகுபிடித்து வைக்கப்பட்டிருந்த நகைகள் இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகைகள் கொள்ளை போகாமல் தப்பின.

இந்த கொள்ளை முயற்சி குறித்து, கோட்டக்குப்பம் போலீசில் ராமு புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடிக்க முயன்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com