நாகர்கோவிலில் அ.தி.மு.க. பிரமுகரின் கடை சூறையாடல் கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு

நாகர்கோவிலில் அ.தி.மு.க. பிரமுகரின் கடையை சூறையாடியது தொடர்பாக கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

நாகர்கோவில்,

அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் தென்கரை மகாராஜன் (வயது 42), தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார். இவர் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் ஒரு வாடகை கட்டிடத்தில் கவரிங் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கவரிங் கடைக்குள் புகுந்துள்ளனர். கடையின் ஒரு பக்க சுவரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை உடைத்து சூறையாடி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

சூறையாடல்

இச்சம்பவம் குறித்து தென்கரை மகாராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையில் விதவிதமாக அடுக்கி வைத்திருந்த கவரிங் நகைகள் அனைத்தும் தரையில் வீசப்பட்டு சேதமடைந்து கிடந்தன. நாற்காலிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு இருந்தன. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 63 ஆயிரமும் திருடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்கள்.

3 பேர் மீது வழக்கு

பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தியதில் கவரிங் கடையை காலி செய்வது தொடர்பாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. அதாவது கவரிங் கடையை காலி செய்யுமாறு அந்த கட்டிடத்தின் உரிமையாளர் தங்கமுருகன் கூறியதாகவும், ஆனால் அதற்கு தென்கரை மகாராஜன் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கவரிங் கடை சூறையாடப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து தங்கமுருகன், அவருடைய மனைவி ராஜேஸ்வரி மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com