நாமக்கல்லில் பெண்களிடம் நகை பறித்தவர் கைது; 16 பவுன் மீட்பு

நாமக்கல்லில் 2 பெண்களிடம் நகை பறித்த சேலத்தை சேர்ந்த மர்ம நபரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் 16 பவுன் நகைகளை மீட்டனர்.
Published on

நாமக்கல்,

நாமக்கல் பொன்விழா நகரை சேர்ந்தவர் வில்லவன். இவரது மனைவி கமலாதேவி (வயது 48). இவர் பொட்டிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2-ந் தேதி காலை 10 மணி அளவில் மாருதி நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். பின்னர் தனது வீட்டிற்கு சக ஆசிரியை ஒருவருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

வீட்டின் அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் திடீரென கமலாதேவி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து கமலாதேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நாமக்கல்-சேலம் சாலை முருகன் கோவில் பஸ்நிறுத்தம் அருகே இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த யுவராஜ் (39) என்பதும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் நகைபறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்து இருப்பதும் தெரியவந்தது.

ஆசிரியை கமலாதேவியிடம் கடந்த 2-ந் தேதி 9 பவுன் நகை பறித்ததையும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கங்காநகரில் ஒரு பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்ததையும் அவர் ஒப்புகொண்டார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் 16 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com