பள்ளிப்பட்டில் காலால் ஓட்டு போட்ட மாற்றுத்திறனாளி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பள்ளிப்பட்டு தேரடிதெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களிப்பதற்காக காலால் ஓட்டு போட்ட மாற்றுத்திறனாளி.
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொள்ளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 52). மாற்றுத்திறனாளி. இவரது இரு கைகளும் பிறந்ததில் இருந்து செயல்படாமல் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி பள்ளிப்பட்டு தேரடிதெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களிப்பதற்காக நரசிம்மன் அந்த வாக்குச்சாவடிக்கு சென்றார்.

வாக்குச்சாவடிக்குள் சென்ற நரசிம்மன் தனது இடது காலை தூக்கி அங்கிருந்த மேஜை மேல் வைத்தார். அங்கு இருந்த ஊழியர் தன்னிடம் இருந்த பேனாவை அவரது காலில் வைத்தார். நரசிம்மன் எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் பதிவேட்டில் தனது காலால் கையொப்பம் இட்டார். அடையாள மை அவரது கால் விரலில் வைக்கப்பட்டது.

அதன் பிறகு நரசிம்மன் ஓட்டு பதிவு செய்யும் மறைவிடத்திற்கு சென்று எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் இடது காலை தூக்கி தனக்கு விருப்பமான சின்னத்தில் வாக்களித்தார். இதை அங்கிருந்த தேர்தல் அலுவலரும், மற்ற ஊழியர்களும் வாக்களிக்க வந்த வாக்காளர்களும் ஆச்சரியமாக பார்த்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com