பரங்கிப்பேட்டையில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பரங்கிப்பேட்டையில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Published on

பரங்கிப்பேட்டை,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). விவசாயி. இவர் பரங்கிப்பேட்டையில் வீட்டுமனை ஒன்றை வாங்கினார். அந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய அவர் முடிவு செய்தார்.

இதற்காக பரங்கிப்பேட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் பெரியப்பட்டை சேர்ந்த இளங்கோவன்(42) என்பவரை கணேசன் அணுகினார். அப்போது, தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கணேசனிடம், இளங்கோவன் கூறினார்.

இதுபற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் கணேசன் புகார் செய்தார். தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை இளங்கோவனிடம் கணேசன் கொடுத்தார்.

இதை அவர் பெற்றுக் கொண்ட போது, அந்த பகுதியில் மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார், இளங்கோவனை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து இளங்கோவனை கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இளங்கோவனை போலீசார் கைது செய்தனர். இந்த, சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com