புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுக்கோட்டை திருக்கோவில்களை சேர்ந்தது ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 25-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதேபோல் மண்டகப்படிதாரர்களின் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பிரகதாம்பாளை, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
இதைத்தொடர்ந்து இரவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஏகாந்த சேவை மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.