அறந்தாங்கி,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது புது பானையில் பச்சை அரிசி இட்டு, பொங்கல் வைப்பது வழக்கம். இதையொட்டி அறந்தாங்கி அருகே துவரடிமனையில் மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்கள், கடந்த 3 மாதங்களாக பொங்கல் பானை உள்ளிட்டவை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் பொங்கல் பானை, அடுப்பு, கலயம் உள்ளிட்டவை தயாரிக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து மண்பானைகள், கலயம் உள்ளிட்டவை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. துவரடிமனையில் பல தலைமுறைகளாக 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இத்தொழிலை செய்து வருகின்றனர். இது குறித்து துவரடிமனையில் மண்பாண்ட தொழில் செய்யும் செல்லையா கூறுகையில், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக செய்து வைக்கப்பட்டு இருந்த பானை, சட்டி, அடுப்பு என அனைத்தும் கஜா புயலால் சேதம் அடைந்தது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
தற்போது மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த பானைகள் செய்ய தேவையான மண் சரியாக கிடைப்பதில்லை. எனவே மண்பாண்டங்கள் தயாரிப்புக்காக, மண்ணை வெட்டி எடுப்பதற்கு அரசு முறையான அனுமதி வழங்க வேண்டும். மண்பாண்ட பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மண்பானை சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும், என்றார். தற்போது பெரிய மண்பானை ஒன்று ரூ.100-க்கும், மண் அடுப்பு ரூ.200-க்கும், கலயம் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.