செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கலெக்டர் நிவாரண உதவி

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கலை அரங்கத்தில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, பசுமை வீடு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 310 மனுக்கள் வரப்பெற்றன.

அவை அனைத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இக்கூட்டத்தில் மதுராந்தகம் வருவாய் கோட்டம் சாலை விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த 9 நபர்களுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிவாரண காசோலையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் அடைந்த 3 மாற்றுத்திறனாளிகள் சார்பாக அவர்களது குடும்பத்தினருக்கு நலவாரியத் தொகையும், ஒரு நபருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும் மீன்வளத்துறை இயக்குனர் தலைமையில் மீன்வள வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டு 3 சிறந்த கிராம அளவிலான கடல் மீன்வளக்கூட்டு மேலாண்மை குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் சூளேரிக் காட்டுக்குப்பம் கிராம அளவிலான கூட்டு மேலாண்மை குழுவிற்கு சிறந்த கிராம அளவிலான கூட்டு மேலாண்மை குழுவாக தேர்வு செய்யபட்டது. இக்குழுவின் தலைவருக்கு மூன்றாம் பரிசு தொகையான ரூ.10,000 பரிசுக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கா.பிரியா, (சமுக பாதுகாப்பு திட்டம்) தனித்துணை கலெக்டர் ஜெயதிபன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com