கடலூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை கண்டித்து நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைக்கு செல்லவில்லை.
இதேபோல் வங்கி ஊழியர்கள், அதிகாரிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி ஊழியர் சம்மேளனம், வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு சில வங்கிகளில் ஊழியர்கள் யாரும் வரவில்லை. இதனால் அந்த வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. வங்கியில் உள்ள காசாளர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
இது பற்றி வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் 3 சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 350 பேர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.50 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஆனால் காசோலை பரிவர்த்தனையில் பாதிப்பு இல்லை என்றார்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி. ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.