கழிவுநீர் கால்வாயில் இளம்பெண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

வேலூரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்து வீசினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

வேலூர்,

வேலூரில் பழைய நேஷனல் தியேட்டர் பகுதியில் இருந்து சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டுக்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. நேற்று அதிகாலையில் இந்த வழியாக சென்றவர்கள், கழிவுநீர் கால்வாயில் ஒரு பெண் இறந்து கிடப்பதை பார்த்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி வேலூர் வடக்கு போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது இளம்பெண் ஒருவர் கால்வாயில் தலைகுப்புற இறந்துகிடந்தார்.

அவருடைய உடலை போலீசார் மீட்டனர். பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். முடியை பாப் கட்டிங் செய்துள்ளார். சுடிதார் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் இறந்து 2 நாட்களுக்குமேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த பெண் யார்?, அவரை யாரும் கொலை செய்து கால்வாயில் வீசினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com