தியாகதுருகத்தில், பெண், தீக்குளித்து தற்கொலை - கணவர் திட்டியதால் விபரீதம்

தியாகதுருகத்தில் கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
Published on

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரவி (வயது 33), பெயிண்டர். இவரது மனைவி தீபா(32). இவர்களுக்கு சர்வேஷ்(8), கமலேஷ்(4) என்ற 2 மகன்களும், புஷ்பிதா(1) என்ற மகளும் உள்ளனர். ரவி தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, தீபாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரவி வழக்கம் போல் குடித்துவிட்டு வந்தார்.

இதை பார்த்த தீபா, மகளிர் சுய உதவி குழுவில் எடுத்த பணத்திற்கு மாத தவணை கட்ட வேண்டி உள்ளது. அதற்கான பணம் கொடுக்காமல் ஏன், குடித்துவிட்டு பணத்தை வீணாக்குகிறீர்கள் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரவி, தனது மனைவியை திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த தீபா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த தீபாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை தீபா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை வீரன்(63) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com