புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, வாட்ஸ்-அப் சமூக வலைத்தளம், பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது.
இதன்படி, வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வரும் சந்தேகத்துக்கிடமான ஒரு செய்தியின் நம்பகத்தன்மையை அறிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செக்பாயிண்ட் டிப்லைன் தொழில்நுட்பத்துக்கு அந்த செய்தியை 919643000888 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
சரிபார்க்கும் மையம், அச்செய்தியை சரிபார்த்து, அது உண்மையானதா? பொய்யானதா? சர்ச்சைக்குரியதா? என்ற தகவலை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும். படங்கள், வீடியோ லிங்க், எழுத்து வடிவம் என பலவகையான செய்திகளை இந்த மையம் ஆய்வு செய்யும். இந்த சேவை, ஆங்கிலத்திலும், இந்தி, தெலுங்கு, வங்காளம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது.