தண்ணீர் வரத்து அதிகரிப்பு: களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குதூகல குளியல்

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து குதூகல குளியல் போட்டு சென்றனர்.
Published on

களக்காடு,

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமாகும். இங்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம். இப்பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையினால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வசதியான அளவில் தண்ணீர் வரத்து உள்ளது.

கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறை விடப்பட்டதால் களக்காடு தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. விடுமுறையின் இறுதி நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் தலையணையில் குதூகல குளியல் போட்டு மகிழ்ந்தனர். மேலும் தலையணை ஆறு, சிறுவர் பூங்கா, அருங்காட்சியகத்திலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

வனத்துறை சோதனைசாவடியில் நுழைவு கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற கார்கள், வேன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றன. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில், களக்காடு வனசரகர் புகழேந்தி தலைமையில் வனஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். களக்காட்டில் இருந்து போதிய பஸ் வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். விடுமுறை நாட்களில் களக்காடு பஸ்நிலையத்தில் இருந்து தலையணைக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com