

புதுடெல்லி,
வளைகுடா போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டிவிட்டது. ஆகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகள் உயரும் அபாயம் உள்ளது
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதலை தொடங்கின. இதையடுத்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதாக அறிவித்தது.
இதனால் பெட்ரோலிய எரிபொருள் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. போர் தொடங்கிய சமயத்தில் ஒரு பீப்பாய் விலை சராசரியாக 60 டாலருக்கு கீழ் இருந்தது.
அந்த விலை படிப்படியாக ஏறி 125 டாலர் என்ற நிலைக்கு வந்தது. இதனால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டன. இந்தியாவும் கடுமையாக சிக்கலை சந்தித்தது.
எண்ணெய் நிறுவனங்கள் தினமும் ரூ.1,000 கோடி இழப்பை சந்தித்து வருவதாக கூறப்பட்டது. எனவே பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. குறிப்பாக சமையல் எரிவாயு விலை மிகமிக அதிகமாக உயர்த்தப்பட்டது.
வளைகுடாவில் ஓரளவு அமைதி திரும்பியதால் மீண்டும் எரிபொருள் சப்ளை சீரானது. அதனால் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. மீண்டும் 70 டாலரை நோக்கி இறங்கியது.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக அமெரிக்கா -ஈரான் இடையே போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்தது. அதற்கு முன்னதாக 3 கப்பல்களை மூழ்கடித்தது.
இதனால் வெகுண்ட ஈரான், பதிலடி நடவடிக்கையில் இறங்கியது. அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை தாக்கியது. நேற்று 20 கப்பல்களை ஈரான் தாக்கியதாக கூறியுள்ளது.
இதனால் வளைகுடாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து 100 டாலரை மீண்டும் கடந்துவிட்டது. இதனால் இந்திய கம்பெனிகளுக்கு இழப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இந்தியாவில் பெட்ரோலிய எரிபொருள் உற்பத்தியில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.23-ம், சமையல் எரிவாயு விலையில் சிலிண்டருக்கு ரூ.200-ம் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆகவே இதைச் சமாளிக்க இந்த எரிபொருள்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.