பீகாரில் தனியார் மயமாகும் 16 அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள்!

அரசு ஆஸ்பத்திரிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பீகாரில் தனியார் மயமாகும் 16 அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள்.
பொது-தனியார் பங்களிப்பு மாதிரி - அரசு மருத்துவக் கல்லூரி
Published on

பாட்னா,

பீகார் மாநிலத்தில்,16 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆஸ்பத்திரிகளை பொது-தனியார் பங்களிப்பு மாதிரியில் இயக்க, அரசு கொள்கை ரீதியான முடிவை எடுத்தது.

பொது-தனியார் பங்களிப்பு மாதிரி

பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி சாம்ராட் சவுத்ரி தலைமையில் கடந்த (புதன்கிழமை) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 17 முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் மிக முக்கியமான நடவடிக்கையாக, ஒரு பல் மருத்துவக் கல்லூரி உட்பட மொத்தம் 16 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆஸ்பத்திரிகளை பொது-தனியார் பங்களிப்பு மாதிரியில் இயக்க, அரசு கொள்கை ரீதியான முடிவை எடுத்தது.

ஆலோசகராக பிடபிள்யூசி நியமனம்

இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும், வழிமுறைகளை வகுப்பதற்கும் சர்வதேச ஆலோசனை நிறுவனமான பிரைஸ் வாட்டர் ஹவுஸ்க்கூப்பர்ஸ் (PwC) நிறுவனத்தை பரிவர்த்தனை ஆலோசகராக பீகார் அரசு நியமித்து உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ 8.27 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

பாதிக்கப்படும் மாவட்டங்கள்

இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பவபூரி, ரஹுய், மாதேபுரா, பூர்ணியா ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளும், சமஸ்திபூர், சரண், போஜ்பூர், மதுபனி, வைஷாலி, பக்சர், சீவான், பெகுசராய், சீதாமர்ஹி, ஜமுய், முங்கர் மற்றும் சுபால் ஆகிய மாவட்டங்களில் கட்டுமானத்தில் இருக்கும் 12 மருத்துவக் கல்லூரிகளும் தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

அரசின் விளக்கம்

பீகார் மாநில மக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை விரைவாகக் கொண்டு சேர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தெரிவித்தார்.

எழும் விமர்சனங்கள்

அரசு ஆஸ்பத்திரிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முடிவால் ஏழை எளிய மக்களுக்கான இலவச மருத்துவச் சேவைகளின் தரம் கேள்விக்குறியாகும் என்றும், கட்டணங்கள் உயரும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com