காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி

காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் தமர்குடா கிராமத்தில் நேற்று ஒரு குடும்பத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்ற உறவினர்களின் குழந்தைகளான தன்மியா ஸ்ரீ (வயது 5), அபிநயா ஸ்ரீ (வயது 4) நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சுமார் 2 மணிநேரத்திற்குமேல் சிறுமிகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வீடு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் சிறுமிகளை தேடினர். அப்போது, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினரின் காருக்குள் சிறுமிகள் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக கார் கண்ணாடியை உடைத்து சிறுமிகளை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதைக்கேட்ட உறவினர்களும் , சிறுமிகளின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

பார்க் செய்யப்பட்டிருந்த காருக்குள் சென்ற சிறுமிகள் கார் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர். அப்போது, காரின் கதவுகள் லாக் ஆகியுள்ளன. இதனால், சிறுமிகளால் காரில் இருந்து வெளியே வரமுடியவில்லை. மேலும், காருக்குள் போதிய காற்று செல்லாததால் சிறுமிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பம், மூச்சுத்திணறல் காரணமாக சிறுமிகள் காருக்குள்ளேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் சிக்கிய சிறுமிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com