இமயமலையில் 18,300 அடி உயர 'பராங் லா' கணவாயை கடந்த தேசிய மாணவர் படை மாணவிகள்

இமயமலையின் மிக கடுமையான பாதைகளை சற்றும் மனம் தளராமல் 30 நாட்களில் சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தை இந்த மாணவிகள் நடந்து கடந்துள்ளனர்.
இமயமலையில் 18,300 அடி உயர 'பராங் லா' கணவாயை கடந்த தேசிய மாணவர் படை மாணவிகள்
தேசிய மாணவர் படை மாணவிகள்
Published on

லடாக்,

தேசிய மாணவர் படையை சேர்ந்த 20 இளம் மாணவிகள், இமயமலையின் மிக கடுமையான பாதைகளை கடந்து ‘அபராஜிதா - பராங் லா 2026’ என்ற தங்களது 30 நாள் வரலாற்று சிறப்புமிக்க சாகச பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்

பெண்களின் வீரம் மற்றும் சக்தியை பறைசாற்றும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி புதுடெல்லியில் இந்த நீண்டதூர மலையேற்ற பயணத்தை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ஆயுத படைகளின் முப்பிரிவுகளை சேர்ந்த பெண் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் இந்த சாகச பயணம் மேற்கொள்ளப்பட்டது.

18,300 அடி உயரம்

இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள கிப்பர் என்ற இடத்திலிருந்து புறப்பட்ட இந்த வீராங்கனைகள், கடல் மட்டத்திலிருந்து சுமார் 18,300 அடி உயரத்தில் உள்ள, உலகின் மிக அபாயகரமான பராங் லா கணவாய் பகுதியை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

250 கி.மீ நடைபயணம்

கொட்டும் பனி, கடுமையான குளிர், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கரடுமுரடான பனிப்பாறைகளுக்கு மத்தியிலும் சற்றும் மனம் தளராமல் 30 நாட்களில் சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தை இந்த மாணவிகள் நடந்து கடந்துள்ளனர். லடாக்கின் சாங்தாங் பகுதியில் உள்ள கர்சாக் என்ற இடத்தை அடைந்து தங்களது லட்சிய பயணத்தை வெற்றிகரமாக முடித்தனர்.

லடாக்கின் சாங்தாங் பகுதியில் உள்ள கர்சாக் என்ற இடத்தை அடைந்து தங்களது லட்சிய பயணத்தை வெற்றிகரமாக முடித்தனர்.
தேசிய மாணவர் படை மாணவிகள்

பாராட்டு

என்.சி.சி வரலாற்றில் மைல்கல்லாக கருதப்படும் இந்த இமாலய சாதனையை படைத்த மாணவிகளுக்கு ராணுவ உயரதிகாரிகளும், பல்வேறு தரப்பினரும் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com