

மும்பை,
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீதிமன்ற நிலுவை வழக்குகளை குறைக்கும் நோக்கில், மும்பை தலைமை நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தின் கீழ் நேற்று முன்தினம் லோக் அதாலத் நடைபெற்றது.
ஐகோர்ட்டு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு முயற்சியால் நடைபெற்ற இந்த லோக் அதாலத்தில், பல ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த காசோலை மோசடி, சொத்து தகராறு உள்பட மொத்தம் 24,252 வழக்குகளுக்கு இருதரப்பு சமரச பேச்சுவார்த்தை மூலம் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.749.23 கோடி பெற்று தரப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தானே பகுதியில் நடைபெற்ற லோக் அதாலத்தில், ஆன்லைன் மூலம் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன இ-செலான் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான 7,001 வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டு. ரூ.1.57 கோடி அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது.