

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 44 பேருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனைவரும் வீட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். நேற்று இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
மேலும், ஊழியர்கள் பாதிப்பு காரணமாக, சுப்ரீம் கோர்ட்டு அறைகள் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இப்பணி காரணமாக, நேற்று சுப்ரீம் கோர்ட்டு அமர்வுகள் 1 மணி நேரம் தாமதமாக கூடின. காலை 10.30 மணிக்கு பதிலாக, 11.30 மணிக்கு விசாரணை தொடங்கியது.
அத்துடன், அவசர வழக்கமாக ஏற்றுக்கொள்ளும்படி நீதிபதிகள் முன்பு வக்கீல்கள் நேரில் கேட்டுக்கொள்ளும் நடைமுறை, மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.