அறிகுறிகள் இல்லாவிட்டாலும் 5 நாட்கள் கட்டாயம் முகாம்களில் இருக்க வேண்டும் - டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவால் ஆம் ஆத்மி அரசு அதிருப்தி

டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஐந்து நாட்கள் முகாம்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்
அறிகுறிகள் இல்லாவிட்டாலும் 5 நாட்கள் கட்டாயம் முகாம்களில் இருக்க வேண்டும் - டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவால் ஆம் ஆத்மி அரசு அதிருப்தி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும், இதர அரசு முகாம்களிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது 8,400க்கும் அதிகமானவர்கள் டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் அறிகுறிகள் இல்லாத பட்சத்திலும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 5 நாட்கள் கட்டாயம் முகாம்களில் இருக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் புதிய வழிமுறைகளை வெளியிட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை டெல்லி அரசுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

இந்த புதிய வழிமுறையானது மேலும் சிக்கலை அதிகரிக்கச் செய்யும் என டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு சமீபத்தில் அதிகரித்து வந்திருந்தது. இதனால் மத்திய உள்துறை அமைச்சர் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் நடத்திய கலந்தாலோசனைக்கு பின்னர் 500 சிறப்பு ரயில் பெட்டிகளை கொரோன சிகிச்சைக்காக வழங்கப்படுவதாக அறிவித்திருந்தார். இதன் பின்னர் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com