

ஐதராபாத்,
வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் 92 வயது பெண் மருத்துவர் ஒருவர். இந்த வயதிலும் அவர் தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் மருத்துவர் சூரி ஸ்ரீமதி (வயது 92). பிரபல மகப்பேறு மருத்துவர் ஆன இவர், கடந்த 68 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார். தன் வாழ்நாளில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பிரசவம் பார்த்து சாதனை படைத்துள்ளார்.
92 வயதை எட்டிய பிறகும், தற்போதும் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக ஓய்வெடுக்காமல், இப்போதும் தேவைப்படும் அவசர காலங்களில் சிசேரியன் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை துல்லியமாக மேற்கொண்டு அசத்தி வருகிறார்.
இவரது இந்த அசாத்திய சேவைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.