

ரேவா,
மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பகவத் விஸ்வகர்மா. இவருடைய மூத்த மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நண்பர்கள், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கான வேலையை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பகவத் விஸ்வகர்மா அவருடைய இளைய மகன் ராகுல் மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவர் என 3 பேர் பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் கொஷ்த கிராமத்திற்கு அருகே சென்றபோது, விரைவாக வந்த சொகுசு கார் ஒன்று திடீரென அந்த பைக் மீது மோதி விட்டு சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் 3 பேரும் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் பைக் முற்றிலும் உருக்குலைந்து போய் விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் ஓடி சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். எனினும் அதில் பலனில்லை. போலீசாருக்கு விபத்து பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில், சொகுசு காரின் ஓட்டுநரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நடந்த இந்த விபத்து பகவத்தின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.