தமிழக கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை: அரசாணை மீதான இடைக்கால தடை 28-ந் தேதி வரை நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கோவில்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மீது விதிக்கப்பட்ட இடைக்கால தடையை வருகிற 28-ந் தேதி வரை நீட்டித்து நேற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழக கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை: அரசாணை மீதான இடைக்கால தடை 28-ந் தேதி வரை நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது, மேலும் கடைகளை கடந்த ஜனவரி 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குமார் மற்றும் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த மனு கடந்த ஜனவரி 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் வினோத் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் நாகமுத்து ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த மனுவின் மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அத்துடன் தமிழக அரசின் அரசாணைக்கு விதித்த இடைக்கால தடையை வருகிற 28-ந் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com