

புதுடெல்லி,
டெல்லியில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் நிதியுதவி திட்டத்தின்கீழ், ஏற்கனவே தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களுக்கு டெல்லி பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து கூடுதலாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று டெல்லி அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினர்.
டெல்லி பேரிடர் மீட்பு நிதியத்தின் கூடுதல் நிதியை பெற தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், ஏற்கனவே நிதியுதவி பெற்ற 21 ஆயிரம் பேரின் விவரங்கள் அரசிடம் இருப்பதால், அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், இதுவரை நிதியுதவி பெறாத கொரோனாவுக்கு பலியானோரின் குடும்பங்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.