2ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள் விசாரணை தள்ளிவைப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

2ஜி வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் மேல்முறையீடு அனுமதி மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு ஜூன் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மேல்முறையீடு மனுக்களை நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்து வருகிறார்.

இருதரப்பு வாதம்

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நீரஜ் ஜெயின், மேல்முறையீடு அனுமதி தொடர்பாக பல்வேறு வழக்குகளில் கூறப்பட்டுள்ள தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதங்களை முன்வைத்தார்.

ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜய் அகர்வால் ஆஜராகி, வரையறுக்கப்பட்ட குற்றம் தொடர்புடைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என விஜய் மதன்லால் சவுத்திரி வழக்கிலும், அதைத் தொடர்ந்து இந்திராணி பட்நாயக் வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அதன்படி, சி.பி.ஐ. வழக்கில் விடுவிக்கப்பட்ட நபர்கள் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தானாகவே விடுவிக்கப்பட வேண்டும். முடக்கப்பட்ட நிறுவனங்களின் சொத்துகளை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார்.

தள்ளிவைப்பு

வாதத்தை பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, மேல்முறையீடு அனுமதி மனுக்கள், இந்த வழக்கில் முடக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்துகளை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com