23 ஆண்டுகளை கடந்தும்... தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் டெல்லி மெட்ரோவின் முதல் ரெயில்

டெல்லி மெட்ரோ ரெயிலில் 2014-ம் ஆண்டில் 6 பெட்டிகளாகவும், 2023-ம் ஆண்டில் 8 பெட்டிகளாகவும் உயர்த்தப்பட்டது.
23 ஆண்டுகளை கடந்தும்... தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் டெல்லி மெட்ரோவின் முதல் ரெயில்
Published on

புதுடெல்லி,

டெல்லியின் முதல் மெட்ரோ ரெயில் சேவை 2002-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி தொடங்கப்பட்டது. அப்போது டெல்லி முதல்-மந்திரியாக இருந்த மறைந்த ஷீலா தீட்சித் முன்னிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி, டெல்லி மெட்ரோ நெட்வொர்க்கின் டி.எஸ்.#01 என்ற முதல் ரெயில் பயணிகளை சுமந்து பயணிக்க தொடங்கியது. நேற்றுடன் அது சேவைக்கு வந்து 23 ஆண்டுகளை பூர்த்தி செய்து உள்ளது.

தினசரி லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றி, அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் பாதுகாப்பாக இறக்கி விட்டு, ஓய்வின்றி பணி செய்து வருகிறது. முதலில் 4 பெட்டிகளுடன் இதன் பயணம் தொடங்கியது. உலக அளவில் தரநிலைகளை அடிப்படையாக கொண்டு அவ்வப்போது அந்த ரெயில் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ரெயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. இதன்படி, ரெயில் சேவையின் தேவையை கவனத்தில் கொண்டு, 2014-ம் ஆண்டில் 6 பெட்டிகளாகவும், 2023-ம் ஆண்டில் 8 பெட்டிகளாகவும் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

இதுபற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில், 2002-ம் ஆண்டில் டெல்லியின் முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. ஏறக்குறைய 29 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணித்தும், 6 கோடி பயணிகளை பாதுகாப்பாக சுமந்து சென்றும், சேர்த்தும் உள்ளது என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com