பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் கைது

பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் வாசிமிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் கைது
Published on

சண்டிகர்,

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. 4 நாட்கள் நடந்த மோதல் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப்பின் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா, பஞ்சாப், காஷ்மீர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, அரியானாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக அரியானாவை சேர்ந்த மேலும் ஒரு யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானாவின் பல்வால் அருகே கோட் கிராமத்தை சேர்ந்த யூடியூபர் வாசிம் அக்ரம். இவர் கடந்த 2022ம் ஆண்டு பாகிஸ்தானின் கசூர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் வாசிமிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வரும் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு வாசிம் உதவி செய்துள்ளார். தானும் பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அரியானா போலீசார் வாசிம் அக்ரமையும், அவரது உதவியாளர் தஹ்க்யூ என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com