

மலப்புரம்,
கேரள மாநிலத்தில் 76 வயது மூதாட்டி ஒருவர் அச்சமின்றி அந்தரத்தில் கம்பியில் பயணித்து சாகசங்களை அனுபவிக்க வயது ஒரு தடையல்ல என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் லட்சுமி (வயது 76). தனது மகன் மற்றும் பேர குழந்தைகளுடன் பொன்னானியில் அமைந்துள்ள சாகச மற்றும் நீர் பூங்காவுக்கு சென்றார். குடும்பத்தினர் படகு சவாரிக்கு சென்றிருந்தபோது அங்கு கம்பியில் பயணிக்கும் சவாரியை பார்த்து, அதில் பயணம் செய்ய முடிவு செய்தார்.
கம்பி கயிறு ஒன்றில் தொங்கியபடி செல்லும் ஜிப்லைன் சவாரிக்கு சென்றார். அந்த சவாரிக்காக, அங்கு நீண்ட வரிசை இருந்தது. ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மத்தியில் லட்சுமியும் வரிசையில் காத்திருந்தார். பின் சிறிதும் அஞ்சாமல் அந்தரத்தில் ஜிப்லைன் கம்பியில் பயணித்து பொன்னானியில் உள்ள ஒரு அகன்ற ஆற்றை கடந்தார். இது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. மூதாட்டி மற்றொருவருடன் ஜிப்லைனில் பயணிக்கும் சாகச காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி பரவலான பாராட்டுகளை பெற்றது.
இதுகுறித்து லட்சுமி கூறியதாவது:
சாகச நடவடிக்கைகளில் பங்கேற்க எனக்கு பயம் இல்லை. தீவிர சாகசங்களை அனுபவிக்க வயது ஒரு தடையல்ல. அதற்கான தன்னம்பிக்கை இருந்தால், சாகசங்களை அனுபவிக்கலாம். எனது குழந்தைகளும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் ஜிப்லைன் சவாரியை மேற்கொள்ள வேண்டாம் என்று என்னிடம் வற்புறுத்தினர். இந்த சாகச செயல்பாடு பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அதை பார்த்தபோது அதை முயற்சி செய்ய விரும்பினேன். அதை இயக்கிய இளைஞர் என்னை அக்கரைக்கு அழைத்து செல்வதாகவும், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார். நாங்கள் பாதி தூரத்தை அடைந்தபோது, என்னுடன் வந்த இளைஞரிடம் என் கையை விடுமாறு கூறிவிட்டு, நானே பட்டைகளை பிடித்து கொண்டேன். ஜிப்லைன் சவாரியை முடித்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற சாகச செயல்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவற்றை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.