

புதுடெல்லி,
தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்.ஐ.ஏ.) கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா ஒன்று நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு பிரிவு (திருத்தம்) மசோதா எனப்படும் இந்த மசோதா கடந்த 15-ந் தேதி அங்கு நிறைவேறியது.
இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடந்தது. பின்னர் இதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா பதிலளித்து பேசினார். பின்னர் குரல் ஓட்டு மூலம் மசோதா நிறைவேறியது.
இதன் மூலம் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலன்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. மேலும் சைபர் குற்றங்கள், ஆள் கடத்தல் போன்ற குற்றங்களை விசாரிக்க கூடுதல் அதிகாரம் அளிப்பதுடன், குறிப்பிட்ட குற்றங்களை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைக்கவும் இந்த மசோதா அனுமதி அளிக்கிறது.
முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அமித்ஷா, இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என கூறினார்.