அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது

பனி லிங்கத்தை தரிசித்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 லட்சத்தைத் தாண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு,
பனிமலைகள் சூழ்ந்த காஷ்மீர் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க கடும் சிரமத்துக்கு மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை 38 நாட்கள் யாத்திரை நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் இந்த யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இன்று 20-வது கட்டமாக 4,388 பேர் (ஜம்மு) பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து பனிலிங்கத்தைக் காண புறப்பட்டுள்ளனர். 115 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 2,815 பக்தர்கள் பஹல்காமிற்கு புறப்பட்டாலும், 95 வாகனங்களில் 1,573 பக்தர்கள் பால்டால் பாதையை விரும்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, யாத்திரை இரண்டு வழித்தடங்களிலும் சீராக நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் 3 லட்சத்தைத் தாண்டும். இதுவரை, 2.90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இயற்கையாகவே உருவான பனி சிவலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டனர்.






