

புதுடெல்லி,
டெல்லியில் ஆதித்திய துபே என்கிற 16 வயது மாணவர் தன் வக்கீல் மூலம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்தியாவில் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை உள்ளது. இந்தநிலையில் அமேசான், பிலிப்கார்ட் போன்ற மின்வணிக நிறுவனங்கள் தங்கள் வினியோக பொருட்களை பாதுகாக்க பிளாஸ்டிக் உரைகளை பயன்படுத்துகின்றன. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் ஒரு மாதத்துக்குள் இதுபற்றி பதில் தரும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் உத்தரவிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து மாணவரின் வக்கீல் கூறும்போது, பிளாஸ்டிக் திடக்கழிவு மேலாண்மை வாரியம் வழங்கிய விதிகள் அனைத்தும் மின்வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதை கண்காணிக்க தவறியதே இந்த குற்றங்கள் தொடரக் காரணம் என்றார்.