

அமெரிக்க பெண் ஒருவர் இந்த சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக கர்நாடகா வந்துள்ளார். அவர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் குட்டா கிராமத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அந்த விடுதியில் பணிபுரிந்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வருஜேஷ் குமார் என்பவர் அந்த விடுதியில் வைத்து அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து அந்த பெண் குடகு மாவட்ட போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் காவல்துறை அந்த விடுதி உரிமையாளரையும், அங்கு பணிபுரிந்த ஜார்கண்டை சேர்ந்த ஊழியர் வருஜேஷ் குமார் என்பவரையும் கைது செய்தனர்.
இச்சம்பவத்தை மூடிமறைக்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அந்த விடுதி உரிமையாளர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 3 நாட்களுக்கு வை-ஃபை சேவைகளை துண்டித்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பெண் அந்த காலகட்டத்தில் யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் இணைய வசதி கிடைத்த பிறகு, பாதிக்கப்பட்ட பெண் மைசூருக்கு செல்வதாகக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறி, இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தூதரகத்திற்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக மைசூர் காவல்துறையினரை தொடர்புகொண்டனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிருபர்களிடம் கூறுகையில், குட்டா காவல் நிலையத்தில் வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட வருஜேஷ் குமார் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு மே 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயர் அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.