ராஜஸ்தானுக்கு இன்று வருகை தந்த அமித்ஷா; விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா நேரில் சென்று, பூங்கொத்து கொடுத்து அமித்ஷாவை வரவேற்றார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய அவரை ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா நேரில் சென்று, பூங்கொத்து கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்றார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூர் நகரில் உள்ள போலீஸ் அகாடெமியில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு சர்மா, நிகழ்ச்சி நடைபெற உள்ள பகுதிக்கு தனிப்பட்ட முறையில் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டடார்.
அப்போது, டி.ஜி.பி. ராஜீவ் சர்மாவும் உடன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 10 ஆயிரம் பேருக்கு போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நியமன ஆணைகளையும் அமித்ஷா இன்று வழங்குவார் என தகவல் தெரிவிக்கின்றது.






