

அமராவதி
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமுந்திரி பகுதியில் கலப்பட பால் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில், கலப்பட பால் விவகாரத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது. நரசபுரம் கிராமத்தில் வரலட்சுமி பால் பண்ணை என்ற பெயரில் அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் அங்கீகாரம் பெறாத வகையில், பால் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் சப்ளை செய்த, அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பாலில் கலப்படம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த கலப்பட பாலை குடித்ததில் 106 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கணேஸ்வரை போலீசார் விசாரணைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் சட்டசபையில் பேசும்போது, இந்த சோக சம்பவம் பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் பாலில் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது என தெரிய வந்தால், அதனை அரசு புறந்தள்ளாது என கூறினார்.
சிகிச்சை பெறுவோரின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என கூறிய அவர் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பும் வெளியிட்டார். இந்த சூழலில், பலி எண்ணிக்கை இன்று 16 ஆக உயர்ந்து உள்ளது.
இதனை மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி வெங்கடேஸ்வர ராவ் இன்று உறுதிப்படுத்தி உள்ளார். இதுதவிர 3 பேர் ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் தீவிரத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.