தலைமைச்செயலகம் முற்றுகையிடும் போராட்டம்: ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி கைது

ஒய்.எஸ்.ஷர்மிளாவின் போராட்டத்தைத் தடுக்க அவரை வீட்டுக்காவலில் வைக்க அம்மாநில அரசு முயற்சி செய்தது.
தலைமைச்செயலகம் முற்றுகையிடும் போராட்டம்: ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி கைது
Published on

அமராவதி,

ஆந்திராவில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, ஆந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைத்தனர்.

இதற்கிடையே, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அம்பாபுரத்தில் உள்ள முன்னாள் எம்.பி., ராமச்சந்திர ராவ் வீட்டிற்கு செல்ல காரில் புறப்பட்டு வந்தார். அப்போது போலீசார் ஷர்மிளாவின் காரை பின்தொடர்ந்தனர். இதையடுத்து, ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.

இந்நிலையில், விஜயவாடாவில் இருந்து கட்சி தொண்டர்களுடன் புறப்பட்ட ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.அப்போது தொண்டர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே ஒய்.எஸ்.ஷர்மிளாவின் போராட்டத்தைத் தடுக்க அவரை வீட்டுக் காவலில் வைக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முயற்சி செய்தது. ஷர்மிளாவின் வீட்டுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் நேற்று ஷர்மிளா வீட்டுக்கே போகவில்லை. காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தங்கினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com