சீமானுக்கு எதிரான மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சீமானுக்கு எதிரான ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
சீமானுக்கு எதிரான மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'ஒரு பேட்டியின்போது, எனது கருத்து அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக கூறி, அப்போதைய திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (தற்போது டி.ஐ.ஜி.யாக உள்ளார்) வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரி, திருச்சி கோர்ட்டில் என் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் மூலம் என்னை அரசியல்துறையில் தவறான நபராக சித்தரிக்கும் முயற்சியில் வருண்குமார் ஈடுபட்டு உள்ளார். எனவே தன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். முதல்கட்டமாக அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் வழக்கை விசாரிக்க தடை விதித்தும், பின்னர் நடந்த விசாரணையில் வழக்கை ரத்து செய்தும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக வருண்குமார் சார்பில் ரமேஷ்வர் பிரசாத் கோயல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏப்ரல் 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது பதில் அளிக்க சீமானுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த மேல்முறையீடு மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சீமான் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. வருண்குமார் சார்பில் நீனா ஆர். நரிமன் ஆஜரானார்.

இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, வருண் குமாரின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்கப்படுவதாகவும், மேல்முறையீடு மனு மீது விரைந்து விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தது விசாரணையை மே 28-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com