

சென்னை,
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசினார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் என்ற பெருமையை அது பெற்றுள்ளது. இதனை தாக்கல் செய்து அவர் பேசும்போது, 2020-ம் ஆண்டில் அரிய வகை காந்தங்களுக்கான திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 4 மாநிலங்களில் அரிய வகை காந்தங்களுக்கான வழித்தடம் ஒன்று அமைக்கப்படும் என்று கூறினார். இதன்படி, தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் இந்த தாது வழித்தடம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மத்திய பட்ஜெட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பு, வெளியிட்டு உள்ள அறிக்கையில், அரிய வகை வழித்தடங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இதனால், சுரங்க தொழில் வளர்ச்சி அடைவதுடன், அதனை மேம்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் உதவுவதுடன், அரிய வகை காந்தங்கள் மற்றும் முக்கிய தாதுக்களில் முன்னணி நாடாக இந்தியா வளர்ச்சியடையவும் உதவும் என தெரிவித்து உள்ளது.