

32 லட்சம் பேர்
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தலைநகர் மும்பையிலும் பாதிப்பு உச்சத்தில் இருந்தது.இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மாநிலத்தில் இருந்து சுமார் 32 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்று உள்ளதாக மாநில தொழிலாளர் நலத்துறை கமிஷனர் மகேந்திர கல்யாண்கர் கூறியுள்ளார். இதில் 11 லட்சம் பேர் உத்தர பிரதேசத்திற்கும், 4 லட்சம் பேர் பீகாருக்கும் சென்று உள்ளனர்.
தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கிற்கு பயந்து சொந்த ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கருத்தை தொழிலாளர் நலத்துறை கமிஷனர் மறுத்து உள்ளார். அவர் தொழிலாளர்கள் கோடை காலத்தில் சொந்த ஊர் செல்வது வழக்கமான ஒன்று தான் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 ஆயிரம் ஆலைகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆலைகள் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது.
மும்பை பெருநகரில் கட்டுமான பணிகள் 75 சதவீத தொழிலாளர்களுடன் நடந்து வருகிறது. தற்போது ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படுவதால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று உள்ளனர். அவர்கள் கோடை விடுமுறை, அறுவடை காலம், திருமண சீசன் என்பதால் தான் சொந்த ஊர் சென்று உள்ளனர் என்றார்.
இதேபோல மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதால், ரம்ஜானை கொண்டாடவும் பலர் சொந்த ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது.