அடையாள அணிவகுப்பு நடத்த எம்.எல்.ஏ.க்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல; பா.ஜ.க. முன்னாள் மந்திரி

அடையாள அணிவகுப்பு நடத்த எம்.எல்.ஏ.க்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல என பா.ஜ.க. முன்னாள் மந்திரி ஷெலார் தெரிவித்து உள்ளார்.
அடையாள அணிவகுப்பு நடத்த எம்.எல்.ஏ.க்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல; பா.ஜ.க. முன்னாள் மந்திரி
Published on

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 23ந்தேதி மராட்டிய முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்று கொண்டனர். இதனால் தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டது.

இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது, நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கவர்னர் மாளிகையில் 3 கட்சிகளின் மூத்த தலைவர்களும் சமர்ப்பித்துள்ளனர். சிவசேனா 63, காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 51 என மொத்தம் 162 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் ஆதரவு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சமாஜ்வாதி கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தங்களுக்கு போதுமான பலம் இருப்பதை கவர்னரிடம் நிரூபிக்கும் வகையில் இன்று இந்த எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பு நடத்துகின்றனர்.

இதற்காக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையாட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 162 எம்.எல்.ஏ.க்களும் ஓரணியில் நின்று உறுதிமொழி ஒன்றை எடுத்து கொண்டனர்.

இதன்படி அவர்கள், சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி தலைமையின் கீழ், என்னுடைய கட்சிக்கு நான் நேர்மையாக இருப்பேன். யாராலும் இழுக்கப்படமாட்டேன். பா.ஜ.க. பலன் அடையும் எதனையும் நான் செய்யமாட்டேன் என உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டுள்ளனர்.

மூன்று கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களும் ஓரணியில் நின்று உறுதிமொழி எடுத்து கொண்டதுபற்றி பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் பள்ளி கல்வி, விளையாட்டு துறை மந்திரியான ஆஷிஷ் ஷெலார் கூறும்பொழுது, குற்றவாளிகளையே அடையாள அணிவகுப்பில் கலந்து கொள்ள செய்வது வழக்கம். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை அல்ல. ஆனால் அணிவகுப்பு நடத்துவது என்பது எம்.எல்.ஏ.க்களையும் மற்றும் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களையும் புண்படுத்தும் விசயம் ஆகும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com