

கவுகாத்தி,
அசாமில் வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டியை காப்பாற்ற முயன்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான்.
அசாம் மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சிவசாகர் மாவட்டம் நிசா பகுதியை சேர்ந்த தீபக் - பர்வதி தம்பதியின் ஒரே மகன் ஹர்தீப் பனிகா (வயது 13). சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவன் வீட்டில் 3 மாதங்களே ஆன நாய்க்குட்டியை வளர்த்து வந்துள்ளான்.
அதேவேளை, கனமழை காரணமாக தீபக்கின் வீட்டிற்குள் நேற்று இரவு வெள்ளம் புகுந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த தீபக் தனது மனைவி, மகனை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல முயன்றார். அப்போது வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணி நாய்க்குட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதைப்பார்த்த சிறுவன் ஹர்தீப் உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டியை மீட்க முயன்றுள்ளான். அப்போது வெள்ளத்தில் சிறுவன் ஹர்தீப் அடித்து செல்லப்பட்டுள்ளான். இதைப்பார்த்த சிறுவனின் தந்தை மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், முயற்சி தோல்வியடைந்த நிலையில் வெள்ள நீரில் சிறுவன் ஹர்தீப் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். அதேவேளை, வெள்ளத்தில் சிக்கிய செல்லப்பிராணி நாய் நீந்தி உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் ஹர்தீப் உயிரிழந்த நிலையில் அவனது உடலை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.