

கெளகாத்தி,
அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையாக மழை பொழிந்து வருவதால் அங்கு பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளபெருக்கில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வெள்ளத்தில் ஏற்பட்ட பேரழிவால் அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கன மழையால் வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.
அஸ்ஸாமில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 6 மாவட்டங்களில் மொத்தம் 4.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஹைலகாண்டி மாவட்டத்தில் மட்டும் 58,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் வோங்கி, லம்பல், இரோசிஹ்பா, லாம்சங், பாட்ஸாய் மற்றும் கொந்தூஜம் ஆகியவை அடங்கும்.
பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.