இறந்துவிட்டதாக 3 நாட்களுக்கு முன்பே வாட்ஸ்அப்பில் இரங்கல் தெரிவித்துவிட்டு மனைவியை கொலை செய்த வாலிபர்


இறந்துவிட்டதாக 3 நாட்களுக்கு முன்பே வாட்ஸ்அப்பில் இரங்கல் தெரிவித்துவிட்டு மனைவியை கொலை செய்த வாலிபர்
x

கோப்புப்படம் 

3 நாட்களுக்கு முன்பு விஜய் ரத்தோட் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் மனைவி இறந்துவிட்டதாக தெரிவித்து இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய் ரத்தோட் (35 வயது). இவருக்கும் சோனாபூர் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது.

தொடக்கத்தில் இருந்தே மனைவியின் நடத்தை மீது விஜய் ரத்தோட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு முற்றியதால் 'இனிமேலும் உன்னுடன் வாழ முடியாது' என கணவரிடம் கூறிவிட்டு வித்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரத்தோட் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் மனைவி புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் செய்தியை பதிவிட்டார். இது அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் ரத்தோட் மனைவியை தேடி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மனைவியை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. என் புகைப்படத்தை வெளியிட்டு எப்படி இரங்கல் தெரிவிக்கலாம் என கூறி வித்யா கணவரிடம் சண்டை போட்டார்.

தகராறு முற்றவே விஜய் ரத்தோட் கத்தியால் மனைவி வித்யாவை சரமாரியாக குத்தினார். 12 தடவை அவர் குத்தியதில் வித்யாவின் மார்பு, வயிறு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வித்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விஜய் ரத்தோட்டை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக விஜய் ரத்தோட்டின் தாய் மற்றும் தம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story