

லே
லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜோஜி லா பகுதியில் சாலையில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் சிக்கி புதைந்து போயின.
இந்த சம்பவத்தில் வாகனங்களில் சென்ற பலர் சிக்கி கொண்டனர். பனிச்சரிவில் சிக்கி 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை மீட்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.
இந்த தகவல் அறிந்ததும், துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா, உடனடியாக நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படி கார்கில் நகர சிறப்பு காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு உள்ளார். சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து உள்ளார்.
பேரிடர் நிவாரண படைகள், எல்லை சாலைகள் அமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புகளும் உச்சபட்ச உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பனிச்சரிவு செய்தியை, மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும் உறுதி செய்துள்ளதுடன், வருத்தமும் இரங்கலும் தெரிவித்து உள்ளார்.