

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் எஜிபுரா பகுதி அருகே குணேஷ் என்பருக்கு சொந்தமுடைய அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இது 20 வருடம் பழமை வாய்ந்தது. இங்கு 4 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று காலை 7 மணியளவில் சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
இத்தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றது. அங்கிருந்து 2 பெண்கள் உள்பட 6 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்களில் கலாவதி (வயது 68) மற்றும் ரவிச்சந்திரன் (வயது 30) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து 2 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.விபத்தில் குழந்தையின் பெற்றோர் உயிரிழந்ததால், அந்த குழந்தையை அரசே தத்தெடுத்து வளர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 40 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியின்பொழுது சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இதில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நிகழந்த இடத்தை கர்நாடக மாநில உள்துறை அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.