

புதுடெல்லி,
பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் நிதின் நவீன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, அவரது தலைமையின் கீழ் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான பட்டியலை நிதின் நவீன் வெளியிட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தரகண்டைச் சேர்ந்த தீரத் சிங் ராவத், டெல்லியைச் சேர்ந்த ராம் மாதவ் உள்பட 11 பேர் துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜகவின் தேசிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், பாஜக புதிய தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தேசிய நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள். அத்துடன், கட்சியின் பிற பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள தோழர்களுக்கும் வாழ்த்துகள்.
இந்த புதிய குழு, அமைப்பு ரீதியான அனுபவம், ஆற்றல் மற்றும் அடித்தட்டு மக்களுடனான தொடர்பை சிறப்பாக ஒருங்கிணைத்து வழங்கும். கட்சியை வலுப்படுத்துவதிலும், மக்கள் சேவையில் கவனம் செலுத்துவதிலும் இந்தக் குழு முழுப் பங்களிப்பை வழங்கும் என அதில் பதிவிட்டுள்ளார்.