பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நாளை முதல் முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாளை முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதன்படி நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கடந்த 23ம் தேதி நடந்த கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு, எல்லை மூடல், சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






