

புதுடெல்லி
ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கடந்த வார விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், 2 நீதிபதிகள் விசாரித்து வந்த இந்த ஜல்லிக்கட்டிற்கு எதிரான வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போன்று கர்நாடகாவில் கம்பளா எனப்படும் எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.