

போபால்,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கியாஸ் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு காலதாமதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்தல், திருடுதல் போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் போபால் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் விமல் குமார். இவர் போபாலில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டு பயன்பாட்டிற்காக 4 கியாஸ் சிலிண்டர்களை வீட்டு வாசலில் வைத்துள்ளார்.
கடந்த 14ம் தேதி இரவு விமல் குமார் வீடு அமைந்துள்ள பகுதியில் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரின் வீட்டு வாசலில் வைத்திருந்த 4 கியாஸ் சிலிண்டர்களை திருடி சென்றனர். 4 கியாஸ் சிலிண்டர்களையும் அந்த கும்பல் பைக்கில் கடத்திச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, முன்னாள் நீதிபதி வீட்டில் கியாஸ் சிலிண்டர்களை திருடிச்சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.